ஆபத்தான திருப்பம்

மணிப்பூரில் இயல்பு நிலை திரும்புவதற்கு அரசு மற்றும் சிவில் சமூகத்தின் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை

May 29, 2023 10:47 am | Updated 10:47 am IST

மணிப்பூரில், குறிப்பாக சூரசந்த்பூர் மற்றும் இம்பாலில் ஏற்பட்ட கலவரத்தில் ஏராளமானோர் உயிரிழந்ததோடு நிறைய மக்கள் இடம் பெயர்ந்திருக்கிறார்கள் . இது நடந்து மூன்றே வாரங்களான நிலையில் அங்கு மீண்டும் வன்முறை வெடித்திருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தின் பழங்குடியினர் பட்டியலில் மெய்ட்டி சமூகத்தை சேர்க்கக் கோரி மார்ச் 27ஆம் தேதியன்று மணிப்பூர் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக போராட்டங்கள் தொடங்கின. அதற்குப் பிறகு, பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட குக்கி-சோமி சமூகத்தின் பிரதிநிதிகள் “தனி நிர்வாகத்தை” கோரும் அளவுக்கு போராட்டங்கள் மிக மோசமான ஒரு திருப்பத்தை அடைந்திருக்கின்றன. இந்த நிலை ஒருபோதும் வந்திருக்கக் கூடாது. பல வருடங்களாகவே சமூகங்களுக்கிடையிலான உறவுகள் எப்போதாவது பிரச்னைகளுக்கு இட்டுச் சென்று, பதட்டமான நிலையிலேயே வைத்திருந்தாலும் மே மாதத்தில் ஏற்பட்ட மோதல்கள் மலைப் பகுதிகளுக்கும் பள்ளத்தாக்குகளுக்கும் இடையிலான உறவுகளில் ஏற்பட்டிருக்கும் ஒரு சீரழிவை குறிக்கின்றன. தவிர, மெய்ட்டி மற்றும் குக்கி-சோமி சமூகங்களில் உள்ள தீவிரவாதிகளாலும் விஷமிகளாலும் நிகழ்த்தப்படும் வன்முறைகளைத் தடுப்பதில் அரசு முழுமையாக தோல்வியடைந்ததையும் அவை குறிக்கின்றன. பா.ஜ.க. முதல்வர் என். பிரேன் சிங் தலைமையிலான மாநில அரசு இதில் நேரடியாக ஈடுபடுவதை தவிர்த்துக்கொண்டு, குறிப்பிட்ட சில சமூகங்கள் குறித்து பாரபட்சமின்றி செயல்பட முடியாமல் இருந்ததும் இதற்கு ஒரு காரணம். கசகசா சாகுபடிக்கு எதிராக விதிக்கப்பட்ட அரசின் தடை, குக்கி-சோமி மலைவாசிகளுக்கு எதிரான நகர்வுகளாகக் கருதப்பட்டது. இது அவர்களின் கோபத்தை அதிகரித்தது. அதே நேரத்தில் உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அமர்வு தந்த மோசமான உத்தரவு – 23 வருடங்கள் பழமையான அரசியல் சாசன அமர்வின் தீர்ப்பை மீறுவதாக உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அந்த உத்தரவைப் பற்றி கருதினார் – நிலைமையை இன்னும் மோசமாக்கியது. சூரசந்த்பூர் மற்றும் இம்பாலில் அதிகரித்து வரும் வன்முறைகளை அரசால் தடுக்க முடியவில்லை என்பது அதன் திறமையின்மையையே காட்டுகிறது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் துணை ராணுவம் மற்றும் காவல்துறையினரின் ரோந்துப் பணியை அதிகப்படுத்துவதன் மூலமும், இடம்பெயர்ந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குவதன் மூலமும், தீவிரவாதப் பிரிவினரின் செல்வாக்கைக் குறைப்பதன் மூலமும் இயல்பு நிலையை மீட்டெடுக்க மத்திய அரசின் உதவியுடன் மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம் பெயர்ந்தவர்களை குறிப்பிட்ட காலத்தில் தங்கள் வீடுகளுக்குத் திருப்பி அனுப்ப அனுமதிக்கும் ஒரு திட்டமும் பாதுகாப்பு படைகளின் உதவியுடன் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். இப்படி செய்யாமல் இருப்பது, வேறுபாடுகள், ஒற்றுமையின்மை, பிரிவினையை வலியுறுத்தும் இருதரப்பிலும் இருக்கும் பேரினவாதிகளுக்கு சாதகமாகவே முடியும். இது நீண்டகால நோக்கில் மாநிலத்துக்கு ஆபத்தானது. இந்த நிகழ்வுகள் குறித்து மத்திய அரசு கவலைப்படாமல் இருக்க முடியாது. வேறு சில வடகிழக்கு மாநிலங்களைப் போல மணிப்பூரும், இன அடையாளங்களைத் தாண்டி இயங்க உதவும் ஒரு குடிமையுணர்வை அதன் பொதுமக்களிடையே வளர்க்க வேண்டும். சமூகத் தலைவர்களுக்கும், மாநில அரசுப் பிரதிநிதிகளுக்கும் இடையே நம்பிக்கை வலுவிழந்து வரும் நிலையில், சமூகங்களுக்கிடையிலான உறவுகளை மீண்டும் கட்டியெழுப்புவதும், பேரினவாத மற்றும் போராளிக் குழுக்கள் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதை அனுமதிக்காமல் இருப்பதும் மணிப்பூருக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சிவில் சமூக உறுப்பினர்களின் கடமை.

Top News Today

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.