இந்த வருடத்தின் பிற்பகுதியில், இந்தியாவில் ஒரு புதிய ‘சூப்பர் கணினி’ அல்லது, இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால், மேம்படுத்தப்பட்ட ‘உயர் செயல்திறன் கணினி (high performance computing -எச்.பி.சி)‘ இருக்கும். அனேகமாக இந்தியாவின் மிக வேகமான கணினியாகவும் இது இருக்கும். பிரான்சிலிருக்கும் தகவல் தொழில்நுட்ப சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமான அடோஸ் நிறுவனத்தால் இது தயாரித்து நிறுவப்படவிருக்கிறது. 2025க்குள் ரூ. 4,500 கோடி மதிப்பிலான உயர் செயல்திறன் கொண்ட கணினிகளை வாங்குவதற்காக பிரான்ஸ் நாட்டுடன் கடந்த 2018 டிசம்பரில் நரேந்திர மோதி அரசு ஒப்பந்தம் செய்தது. இந்த எச்.பி.சி அமைப்புகள் புனேவில் உள்ள இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவனம் மற்றும் நொய்டாவில் உள்ள நடுத்தர தூர வானிலை முன்னறிவிப்புக்கான தேசிய மையம் ஆகிய இரண்டு நிறுவனங்களில் இயங்கும். நொய்டாவில் தற்போது இந்தியாவின் மிகவும் சக்தி வாய்ந்த இரண்டு இயந்திரங்களான மிஹிர் மற்றும் பிரதியுஷ் ஆகியவை இருக்கின்றன. அவற்றின் முன்னோடிகளைப் போலவே, அடோஸ் இயந்திரங்களும் அடிப்படையில் அதிநவீன வானிலை மாதிரிகளை இயக்கப் பயன்படுத்தப்படும். நீண்ட கால பருவமழை தொடங்கி 15 நாட்களுக்கான முன்னறிவிப்பு மற்றும் தினசரி வானிலை மாற்றங்களுக்கான முன்னறிவிப்புகளை தயார் செய்ய இவை பயன்படுத்தப்படுகின்றன. வளிமண்டலம் மற்றும் பெருங்கடல்களின் நிலையை ஒப்புருவாக்குவதற்கு துல்லியமான முன்னறிவிப்புகள் அடிப்படையானவை என்பதால் இதற்கு மிக சக்தி வாய்ந்த இயந்திரங்கள் தேவை. சூப்பர் கணினிகள் என்பது எப்போதும் ஓட்டத்தில் இருக்கும் பரபரப்பான ஒரு சொல். இருபதாண்டுகளுக்கு முன்பு சூப்பர் கணினிகளாக இருந்தவை இப்போது மாணவர்களின் மடிக் கணினிகளாகவும் கேமிங் அமைப்புகளாகவும் இருக்கின்றன.
வானிலை முன்னறிவிப்புகள் தவிர, புரத உயிரியல், விண்வெளி-மாடலிங் பயன்பாடுகள், செயற்கை நுண்ணறிவு இணைக்கப்பட்ட பயன்பாடுகள் போன்ற பல சவாலான ஆராய்ச்சி கேள்விகளும் கணினியை மிகவும் சார்ந்திருக்கின்றன. இந்த நிலையில் எச்.பி.க்களை வைத்திருப்பதையேகூட தொழில்நுட்ப வலிமையை குறிக்கும் பதக்கங்களாக நாடுகள் பார்க்கின்றன. இருபதாண்டுகளுக்கு மேலாக, ‘டாப் 500 திட்டம்’, 500 மிகவும் சக்திவாய்ந்த எச்பிசி இயந்திரங்களின் பட்டியலை பராமரித்து வருகிறது. இது ஆண்டுக்கு இரண்டு முறை புதுப்பிக்கப்படுகிறது. இந்த பட்டியலில் இடம் பெற்றால் அந்த நாடுகள் இந்த கணினிகள் தங்களிடம் இருப்பதை அதிகமாகவே விளம்பரப்படுத்துகின்றன. தற்போது, புனேவின் மேம்பட்ட கணினி மேம்பாட்டு மையத்தில் (சி.டி.ஏ.சி) வைக்கப்பட்டுள்ள ஒரு இயந்திரம் 13 பெட்டாஃப்ளாப்ஸ் அதிகபட்ச வேகத்துடன் இயங்கக் கூடிய, முதல் 100 இடங்களில் உள்ள ஒரே இந்திய இயந்திரம். ஒரு வினாடிக்கான மிதக்கும் புள்ளி செயல்பாடுகள் (Floating point operations per second - எஃப்.எல்.ஓ.பி.எஸ்) என்பது கணினி செயலாக்க திறன்களின் குறிகாட்டி. 1 பெட்டாஃப்ளோப் என்பது 1,000 டிரில்லியன் ஃப்ளாப்ஸ் என்று கணக்கிடப்படுகிறது. நிறுவப்பட உள்ள பிரெஞ்சு இயந்திரங்கள் 18 பெட்டாஃப்ளாப்ஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ஏற்கனவே பல ஆராய்ச்சி நிறுவனங்களில் பெட்டாஃப்ளாப் வரம்பில் உள்ள சில இயந்திரங்களைக் கொண்டிருக்கிறது. சக்தி வாய்ந்த சூப்பர் கணினிக்களை வைத்திருப்பதன் மூலம், தீர்க்க முடியாத சிக்கல்களைத் தீர்க்க விரும்பும் இந்திய விஞ்ஞானிகள் எப்போது வேண்டுமானாலும் அதை பயன்படுத்தலாம் என்கிற நம்பிக்கையை அளிக்கிறது. ஆனால் இந்த இயந்திரங்களின் பயன்பாடு அடிப்படை அறிவியல் அல்லது பொறியியல் வணிக தயாரிப்புகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளதா என்பது வேறு விஷயம். இந்த இயந்திரங்களின் துணையோடு, குறுகிய கால வானிலை முன்னறிவிப்புகளை இந்தியா மேம்படுத்தியிருப்பதோடு புயலுக்கான முன்னறிவிப்புகளையும் துல்லியமாக்கியிருக்கிறது. ஆனால் அதன் வேகம் மற்றும் ஆற்றல் பற்றிய புகழுரைகளால் திருப்தியடைவதைவிட பிற துறைகளில் அதன் மதிப்புக்கான கூடுதல் பொறுப்புடைமை இருக்க வேண்டும்.
COMMents
SHARE