குறியீடுகளும் அர்த்தங்களும்

புதிய நாடாளுமன்ற கட்டடத் திறப்புவிழாவில் மத சடங்குகள் இடம்பெற்றது, நெறிகளை மீறியதாக இருந்தது

May 30, 2023 11:16 am | Updated 11:16 am IST

புதிய நாடாளுமன்ற கட்டடத்தை பிரதமர் நரேந்திர மோதி ஞாயிற்றுக்கிழமை திறந்து வைத்த நிகழ்வு, அவர் பழகியிருந்த பாணியிலேயே இருந்தது: அவரது விமர்சகர்களில் பலர் பிரச்னைக்குரியது என்று கருதும் ஒரு வகை அரசியலை முன்னெடுக்க கிடைக்கும் ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்துவது. இந்தியாவின் நுணுக்கமான பன்முகத்தன்மை, அதன் வளமான பண்பாட்டு பாரம்பரியம் மற்றும் அதன் வளர்ந்து வரும் விழைவுகளை பிரதிநிதித்துவப்படுத்துவதாக புதிய கட்டடத்தின் அழகியல் அம்சங்களை திரு. மோதி முன்வைத்தார். பல மத பிரார்த்தனைகள் இந்த விழாவின் ஒரு பகுதியாக இருந்தாலும், இந்துச் சடங்குகள் பிற அனைத்தையும் மறைத்தது சந்தேகத்திற்கிடமின்றி இருந்தது. தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு சைவப் பிரிவால் இந்தியாவின் முதல் பிரதமருக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட செங்கோலைச் சுற்றி ஒரு கலைநயமிக்க கதையை புனைந்ததன் மூலம், தற்போதைய அரசு இந்தியாவின் குடியரசு இறையாண்மையின் நிறுவனக் கொள்கைகளை மறுபரிசீலனை செய்ய முனைந்திருக்கிறது. செங்கோல் என்பது ஆன்மீகத்தின் ஒரு குறியீடு. இப்போது அது மக்கள் பிரதிநிதிகளின் சபையில் நிறுவப்பட்டிருக்கிறது. இந்த குறியீடு, இந்தியாவின் அரசியல் மையத்துடனான தமிழ்நாட்டின் தொடர்பை வலுப்படுத்துகிறது. பாரதீய ஜனதா கட்சியும் (பா.ஜ.க) இதிலிருந்து அரசியல் ஆதாயங்களை பெற முயற்சிக்கிறது. திறப்பு விழா நாள், இந்துத்துவத்தின் தந்தையான வி.டி.சாவர்க்கரின் பிறந்தநாள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியக் குடியரசின் தன்மையை ஒரு புதிய தன்மைக்கு மாற்றுவதற்கான தேடல், விழாவின் பாணியிலும் சாராம்சத்திலும் தெளிவாகத் தெரிந்தது.

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியா எதிர்கொள்ளவிருக்கும் பிரதிநிதித்துவம் சார்ந்த சவாலை அணுகுவது குறித்தும் இந்த புதிய கட்டிடம் கவனத்தை திருப்புகிறது. நாடு தழுவிய அளவில் தொகுதி மறுவரையறை செய்யப்படும்போது அது தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப பிரதிநிதித்துவத்தை மறுஒதுக்கீடு செய்யும். இது நாடாளுமன்றத்தில் தென் மாநிலங்களின், மொழி சிறுபான்மையினரின் குரலை கணிசமாக, ஒப்பீட்டளவில் குறைக்க வழிவகுக்கும். மக்கள் தொகையை நிலைப்படுத்திய மாநிலங்களின் பிரதிநிதித்துவம் முற்றிலுமாகக் குறைவதைத் தவிர்ப்பதற்காக மக்களவை மற்றும் மாநிலங்களவையின் அளவு அதிகரிப்பதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆனால், இந்திய அரசியலின் புவியியல் ரீதியான பிளவுகளால் ஏற்கனவே பல பிராந்தியங்களிடையே நிலவும் உரிமைகள் பறிக்கப்பட்டதாக நிலவும் உணர்வைத் தணிக்க இது போதுமானதாக இருக்காது. பல மாநிலங்கள், பா.ஜ.கவின் செல்வாக்கின் வட்டத்தில் இல்லையென்றாலும் அதன் வலிமையான கோட்டைகளிலிருந்துதான் அந்த கட்சி அதன் நாடாளுமன்ற பெரும்பான்மையை வென்றிருக்கிறது. 38 சதவீத மக்களின் வாக்குகளுடன், பா.ஜ.க தற்போது 55 சதவீத மக்களவை தொகுதிகளைக் கொண்டிருக்கிறது. தொகுதி மறுவரையறைக்குப் பிறகு இந்த சமநிலையற்ற தன்மை தீவிரமடையும். அதன் செல்வாக்கான பகுதிகளைத் தாண்டி பிற இடங்களையும் சமூகங்களையும் அணுகுவதற்கான பா.ஜ.கவின் முயற்சி வரவேற்கத்தக்கது. ஆனால் இந்தியாவின் பிராந்திய சமநிலையற்ற தன்மையை சமாளிக்க மத்திய அரசும், பா.ஜ.கவும் இன்னும் தீவிரத்தையும், நுண்ணர்வையும் முதிர்ச்சியையும் காட்ட வேண்டும். இதற்கு குறியீடுகளைத் தாண்டிய ஒரு பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

Top News Today

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.