பழையதும் புதியதும்

டைட்டன்ஸ் அணிக்கு எதிரான சிஎஸ்கேவின் வெற்றி, ஐபிஎல்லின் சமீபத்திய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியது

May 31, 2023 12:23 pm | Updated 12:23 pm IST

கோடைக்கால இரவில் மழை பெய்து கொண்டிருப்பதால் வானிலை நிலையற்றதாக இருந்திருக்கலாம். ஆனால் திங்கள் இரவு தொடங்கி செவ்வாய்கிழமை முடிந்த ஆட்டத்தில் இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்) கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) வென்றதை ஒட்டிய சூழலில் எந்த நிலையற்றதன்மையும் இல்லை. அகமதாபாத் நரேந்திர மோதி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக கடைசி ஓவரில் சிஎஸ்கே அணி அபார வெற்றியைப் பெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற இறுதிப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா இறுதியில் வெற்றிக்கான ரன்களை குவித்தார். ஞாயிற்றுக்கிழமை மழை கொட்டித் தீர்த்த நிலையில், திங்கள் அன்றும் மழை ஆட்டத்தை தடுத்து நிறுத்தியது. இதனால் ஆட்டத்தின் முக்கியமான பகுதி செவ்வாய்க்கிழமையன்று அதிகாலையில்தான் அரங்கேறியது. அதன் நிரந்த கேப்டனான எம்.எஸ்.தோனியிடமிருந்து சி.எஸ்.கே. பெற்ற பண்பான நிதானம், கம்பீரமாக இருந்தது. தான் இன்னொரு ஐ.பி.எல் போட்டியில் பங்கேற்க கூடும் என்றும் தோனி சொன்னார். ஐ.பி.எல் வரலாற்றில் மிகவும் நிலையான அணியான சி.எஸ்.கே, இளம் அணிகளில் மிகவும் நம்பிக்கைக்குரிய அணியான டைட்டன்ஸை எதிர்கொண்டது பொருத்தமானது. இறுதிப் போட்டியில் டி 20 கிரிக்கெட்டுடன் தொடர்புடைய அனைத்து பதற்றங்களும் இருந்தன. தோனியின் மின்னல் வேக ஸ்டம்பிங் காரணமாக ஷுப்மன் கில்லை 39 ரன்களில் ஆட்டமிழக்கச் செய்தது சி.எஸ்.கே. ஆனால் சென்னையைச் சேர்ந்த வீரர் சாய் சுதர்சன் 96 ரன்கள் எடுத்த நிலையில் டைடன்ஸ் 4க்கு 214 ரன்கள் எடுத்து முடித்தார்கள். மழை இடைவேளைக்குப் பிறகு இலக்கு 171 ஆக மாற்றப்பட்டது. ஆனால் சி.எஸ்.கே ஈடுகொடுத்து ஆடியது. தோனி டக் அவுட் ஆனாலும் ஜடேஜாவின் நீண்ட ஆட்டம் வெற்றியை ஈட்டியது. பத்து அணிகள் பங்கு பெற்ற நீண்ட போட்டியின் உச்சமாகவும் இந்த இறுதி ஆட்டம் அமைந்தது. பழைய அணிகளான சி.எஸ்.கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளோடு, கடந்த வருடம் ஆடத்

தொடங்கிய டைட்டன்சும் லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸும் கடைசி நான்கு இடங்களில் இடம் பெற்றது, அவர்களது உள்ளார்ந்த வலிமையின் பிரதிபலிப்பாக இருந்தது. சி.எஸ்.கே எப்போதுமே பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் முனைப்பில் இருந்த நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக ஆரம்பித்து, பின்னர் தொடர்ந்து தனது ஆற்றலை நிரூபித்தது. மற்ற அணிகளில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மீண்டும் தடுமாறியதால் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலியின் ஐ.பி.எல் கோப்பையை வெல்லும் கனவு ஏக்கமாகவே இருந்தது. வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் கோலி மற்றும் ரோஹித் சர்மாவின் வாரிசாக இருப்பார் என்பதை கில் (890 ரன்கள்) நிரூபித்த நிலையில், அஜிங்க்யா ரஹானே, விருத்திமான் சஹா மற்றும் மோஹித் சர்மா போன்ற அனுபவம் கொண்ட வீரர்களும் டி 20 வடிவத்தில் தாங்கள் திறமையானவர்கள்தான் என்பதை காட்டினார்கள். டைட்டன்ஸ் அணியை சிறப்பாக வழிநடத்திய ஹர்திக் பாண்ட்யா, கொஞ்சம் அதிர்ஷ்டம் இருந்திருந்தால் கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டிருக்கலாம். சிங்கள வேகப்பந்து வீச்சாளர் மாதீஷா பத்திரணவுக்கு சி.எஸ்.கே அணிக்குள்ளும், ரசிகர்களிடமும் நம்பமுடியாத ஆதரவு கிடைத்ததை பார்க்கும்போது பழைய காயங்களை ஆற்றுப்படுத்தும் திறன் விளையாட்டுக்கு இருப்பதற்கான சாட்சியாக அது இருந்தது. அதே நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இல்லாதது விளையாட்டில் அரசியலின் செல்வாக்கையும் பிரதிபலிக்கிறது. ஐ.பி.எல் முடிந்திருக்கலாம்; ஆனால் இந்திய நட்சத்திரங்களுக்கு இன்னும் ஓய்வுக்கான நேரம் வரவில்லை. ஜூன் 7ஆம் தேதி முதல் லண்டனின் ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு அவர்கள் இப்போது தயாராக வேண்டும்.

Top News Today

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.