கடந்த வாரம், இந்தியாவின் காப்பீட்டுத் துறை கட்டுப்பாட்டகத்தின் தலைவர், அதிர்ச்சிகள் ஏற்படுத்தக்கூடிய அபாயங்களிலிருந்து மக்கள்தொகையில் பெரும் பகுதியை காப்பாற்றுவதற்கான ஒரு புதிய வரைபடத்தை வெளியிட்டார். 2047க்குள் அனைவருக்கும் காப்பீடு செய்யும் நோக்கில் இது அமைந்திருந்தது. நாட்டின் “மிகப்பெரிய பாதுகாப்பு இடைவெளிகளை” நிரப்ப இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (ஐஆர்டிஏஐ) கடைபிடித்து வரும் இந்த “யுபிஐ போன்ற தருணத்தின்” அடிப்படை என்பது எளிமையான எல்லாவற்றையும் உள்ளடக்கிய ஒரு காப்பீட்டுத் திட்டம்தான். ஆயுள் மற்றும் பொது காப்பீட்டு நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படும் இந்த தொகுக்கப்பட்ட ‘பீம விஸ்தார்’ திட்டம், மருத்துவ அவசரநிலை, விபத்துகள், திருட்டுகள் அல்லது குடும்பத்தில் இறப்பு ஏற்பட்டால் குடும்பங்களுக்கு விரைவான நிதி உதவியை வழங்கும். இந்தக் காப்பீட்டின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு இன்னும் குறைவாக இருப்பதால், ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவருக்கும் இது போன்ற திட்டம் துன்ப காலங்களில் எப்படி பயனளிக்கும் என்பதை எடுத்துச் சொல்ல பெண்கள் தலைமையில் கிராம சபை அளவிலான முன்முயற்சியை மேற்கொள்வதற்கு ஒழுங்குமுறை ஆணையம் முன்மொழிந்திருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் விநியோகஸ்தர்களை ஒருங்கிணைத்து வாடிக்கையாளர்களுக்கு ஒரே இடத்தில் எல்லாவற்றையும் பெறும் அனுபவத்தையும் வாய்ப்பையும் இந்த புதிய ‘பீம சுகம்’ தளம் வழங்கும். தவிர, காப்பீட்டுக் கோரல்களுக்கான சேவையையும் முன்னகர்த்த உதவும். மாநிலங்களின் டிஜிட்டல் இறப்பு பதிவேடுகளை இந்த தளத்துடன் இணைப்பதன் மூலம் ஆயுள் காப்பீட்டு உரிமைகோரல்களை சில மணிநேரங்கள் அல்லது அதிகபட்சம் ஒரு நாளில் தீர்க்க முடியும் என்று கட்டுப்பாட்டகம் நம்புகிறது. மூலதனத் தேவை விதிமுறைகளை எளிதாக்குவதற்கும், பல புதிய
நபர்கள் சந்தைக்குள் நுழைவதற்கும் சிறப்புப் பிரிவுகளின் பயன்படுத்தப்படாத தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் சட்டரீதியிலான திருத்தங்கள் செய்வதற்கான திட்டம் இருக்கிறது. ஒரு காலத்தில் நலிவடைந்த பொதுத்துறை தலைமையிலான இந்த தொழில்துறையில் தனியார் நிறுவனங்கள் நுழைந்து இருபதாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில், இந்தியாவின் காப்பீட்டுப் பரவல் (மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பிரீமியம் கட்டணங்களின் விகிதம்) உயர்ந்திருக்கிறது. அதாவது 2001-02ல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.7 சதவீதமாக இருந்த ப்ரீமியங்களின் மதிப்பு 2021-22ல் 4.2 சதவீதமாக உயர்ந்துள்ளன. ஆனால், 2009-10 ஆம் ஆண்டில் இது 5.2 சதவீதமாக இருந்து தற்போது சரிந்துள்ளது. ஆயுள் அல்லாத பாலிசிகள் இன்னும் ஒரு சதவீத அளவைத் தாண்டவில்லை. இந்தியாவின் மக்கள்தொகையின் அபரிமிதமான அளவு மற்றும் நிதி பற்றிய மோசமான கல்வியறிவு நிலைகளை வைத்துப் பார்க்கும்போது, தற்போதைய நிலையில் இருந்து விடுபட வேண்டிய கட்டாயம் சந்தேகத்திற்கு இடமின்றி உள்ளது. மாநில அரசுகளை ஒருங்கிணைத்து, மாநில அளவிலான வங்கிக் குழுக்களைப் போன்ற அமைப்புகளை அமைக்கும் ஐ.ஆர்.டி.ஏ.ஐவின் நகர்வு, விழிப்புணர்வை அதிகமாக்குவதற்கும் அதிக இடங்களை சென்றடைவதற்குமான மாவட்ட வாரியான நுணுக்கமான உத்திகளை உருவாக்கவும் உதவும். இத்துறையில் இருக்கும் நிறுவனங்களும் பெரிய நகரங்களைத் தாண்டி பார்க்க வேண்டிய தேவை இருக்கிறது. அவர்களது வசதியான களங்களைத் தாண்டி செல்வதற்கு தேவையான அளவுகளை பீம விஸ்தார் திட்டம் உருவாக்கித் தரும். எல்லாவற்றிற்கும் மேலாக, சுகாதாரம் மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டத்திற்கு விதிக்கப்படும் 18 சதவீத ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். எதாவதொரு மருத்துவப் பேரழிவு ஒரு குடும்பத்தை வறுமைக் கோட்டிற்குக் கீழே தள்ளக் கூடிய ஒரு நாட்டில், மருத்துவக் காப்பீட்டை வாங்கக் கூடியவர்கள் இவ்வளவு வரி செலுத்த முடியும் என்ற கருத்து ஏற்றுக்கொள்ள முடியாதது. ஐ.ஆர்.டி.ஏ.ஐ.யில் தலைமையின் தொடர்ச்சியை உறுதி செய்வதும் அதே அளவில் முக்கியமானது. தற்போதைய தலைவரின் பதவிக் காலத்திற்கு முன்னர் அதன் தலைமைப் பொறுப்பில் இருந்த ஒன்பது மாத வெற்றிடம் போன்ற சூழ்நிலை ஏற்க முடியாத ஒன்று.
COMMents
SHARE