துருக்கியில் தொடரும் தற்போதைய நிலை

கடந்த காலத்தின் தவறுகளை சரிசெய்து ஒரு புதிய, அனைவரையும் உள்ளடக்கிய தொடக்கத்தை எர்துவான் வழங்க வேண்டும்

June 01, 2023 10:57 am | Updated 10:57 am IST

பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் நிர்வாகத்துக்கு எதிரான பரவலான அதிருப்தியின் பலனாக ரிசெப் தயிப் எர்துவானின் நீதி மற்றும் மேம்பாட்டுக் கட்சி (ஏ.கே.பி) 2002ல் ஆட்சிக்கு வந்தபோது, அவர் அரசியல்ரீதியாக ஒரு வெளிநபராகவே இருந்தார். கெமாலிச மதச்சார்பின்மைவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் அமைப்பில் அவர் ஒரு இஸ்லாமியர். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு, திரு. எர்துவான்தான் முழு நிர்வாகமாக இருக்கிறார். பாரம்பரியமாக பழைய ஒழுங்கின் பாதுகாவலராக இருக்கும் ராணுவம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கிறது. நிறுவனங்களையும் அவர் கட்டுப்படுத்துகிறார். உலாமாக்களுடன் நெருக்கமான தொடர்புகளைக் கொண்ட ஏ.கே.பி ஒரு மேலாதிக்க அரசியல் இயந்திரமாக இருக்கிறது. ஆனால் 2023ன் பொருளாதார மற்றும் அரசியல் நிலைமை 2002ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் வகையில் உள்ளது. தீவிரமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியோடு, ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் பின்னுக்குத் தள்ளுவதாக குற்றச்சாட்டுகளையும் எதிர்கொண்டுள்ள நிலையில், அவரது நீண்டகால ஆட்சிக்கு எதிராக பரவலான அதிருப்தி நிலவுகிறது. இந்த கோபத்தைப் பயன்படுத்திக் கொள்வதற்காக ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகள் மே 14ஆம் தேதியன்று அவருக்கு முதல் சுற்று வெற்றியைதான் மறுக்க முடிந்தது. ஆனால் ஞாயிறன்று நடந்த போட்டியில், அவர் 52.1 சதவீத வாக்குகளைப் பெற்றார். கெமல் கிலிக்டரோக்லு 47.9 சதவீத வாக்குகளை பெற்றிருந்தார். முடிவை ஏற்றுக் கொண்டாலும் திரு. கிலிக்டரோக்லு இந்த தேர்தல் செயல்முறையை “கடந்த பல வருடங்களில் நடந்த மிக நியாயமற்ற தேர்தல்களில் ஒன்றாக” குறிப்பிட்டார். அவர் சொன்னதிலும் ஒரு உண்மை இருந்தது. திரு எர்துவானும் அவரது கூட்டணியினரும் பெரிய ஊடகங்களைக் கட்டுப்படுத்தி தகவல் பரிமாற்றத்தை வடிவமைத்தார்கள். பள்ளிவாசல்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் இமாம்களை நியமிக்கும் மத இயக்குநரகம் (தியாநெட்) உள்ளிட்ட அரசு நிறுவனங்கள் ஏ.கே.பியின் பரப்புரையை பல இடங்களுக்கும் இட்டுச்சென்றன. பிரதான குர்த் கட்சி தனது போட்டியாளரை ஆதரிப்பதால் எதிர்க்கட்சிகள் “பயங்கரவாதிகளுடன்” தொடர்புகளைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார். சிறுபான்மை அலெவி சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அதிகாரியான திரு. கிலிக்டரோக்லு ஒரு உற்சாகமான பரப்புரையை மேற்கொண்டாலும் ஏ.கே.பி.யின் இஸ்லாமிய ஜனரஞ்சகவாதத்தை சமாளிக்க அவரால் முடியவில்லை.

முஸ்தபா கெமால் ‘அட்டாதுர்க்’ க்குப் பிறகு மிகவும் சக்திவாய்ந்த துருக்கிய தலைவரான திரு எர்துவான், கடந்த 20 ஆண்டுகளில் நாட்டின் அரசியலையும் சமூகத்தையும் மறுவடிவமைத்திருக்கிறார். ஒட்டோமான் கலீபாவை ஒழித்து, துருக்கியை மதச்சார்பின்மை நாடாக்கிய கெமால் அட்டாதுர்க், மதகுருமார்களை தேசம் குறித்த தனது பார்வைக்கு அச்சுறுத்தலாகப் பார்த்தார். துருக்கியின் நவீன வரலாற்றில் கெமாலிசத்திற்கும் இஸ்லாமியத்திற்கும் இடையிலான பதற்றங்கள் எப்போதும் இருந்திருக்கின்றன. ஆனால் திரு. எர்துவான் அதிகாரத்திற்கு வரும்வரை, எந்த இஸ்லாமியத் தலைவரும் இந்த அமைப்பை சீர்குலைக்க முடியவில்லை. அதை செய்யும்போது, அவர் அதிகாரங்களைக் குவித்து அரசியலமைப்பை மாற்றி எழுதி, அதை நிறைவேற்று அதிகாரம் கொண்ட அதிபருக்கு முக்கியத்துவம் தரும் வகையில் மாற்றி, சர்வ வல்லமை வாய்ந்த அதிபராக தன்னைதானே தேர்ந்தெடுத்துக் கொண்டார். மாற்றுக்கருத்துகளை அடக்கி குர்த் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரை முடுக்கியதோடு அரசியல் எதிரிகளை சிறையில் அடைத்தார். ஆனாலும் இந்த தேர்தல் அவருக்கு மிகப்பெரிய சவால். அவர் இரண்டாவது சுற்றுக்கு செல்ல வேண்டியிருந்ததும், வெறும் மூன்று புள்ளிகள் முன்னிலையுடன் இருந்ததும் துருக்கிய சமூகம் பிளவுபட்ட நிலையில் இருப்பதற்கான நினைவூட்டலாக அவருக்கு இருக்கும். மோசமான நிலையில் இருக்கும் பொருளாதாரத்துக்கு உடனடி கவனம் தேவை. ஏற்கனவே அவரது சர்வாதிகாரப் போக்குகளாலும் பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்தாலும் சீர்குலைந்திருக்கும் திரு. எர்துவானின் பாரம்பரியத்துக்கு புதிய பதவிக்காலம் ஒரு நல்ல வாய்ப்பு. தவறுகளைத் திருத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய ஒரு புதிய தொடக்கத்தை வழங்கவும் உதவும் வாய்ப்பு. ஆனால் துருக்கியின் இந்த இஸ்லாமியத் தலைவர் அப்படியொரு மாற்றத்துக்கு தயாராக இருக்கிறாரா என்று தெரியவில்லை.

Top News Today

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.