பன்னிரெண்டு மாதங்களுக்கான தேசிய வருமானம் குறித்த தேசிய புள்ளிவிவர அலுவலகத்தின் தற்காலிக மதிப்பீடுகள் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வந்திருக்கின்றன. நான்காவது காலாண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீடுகள், நெருக்கடிகள் இருந்தபோதிலும் கடந்த ஆண்டு வேகத்தைத் தக்கவைத்துக் கொண்ட பொருளாதாரத்தைப் பற்றிய ஒரு சித்திரத்தை முன்வைக்கின்றன. ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.1 சதவீதம் அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. இது முழு ஆண்டு வளர்ச்சியை கணிக்கப்பட்டதைவிட சற்றே உயர்ந்த 7.2 சதவீத வேகத்திற்கு உயர்த்த உதவுகிறது. நான்காவது காலாண்டிற்கான மொத்த மதிப்பு கூட்டப்பட்ட எண்கள் முந்தைய மூன்று மாதங்களைவிட பரந்த அளவிலான வளர்ச்சியை சுட்டிக்காட்டுகின்றன. எட்டு ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டப்பட்ட துறைகளின் விரிவாக்கத்தில் இரண்டு மட்டுமே மந்தநிலையை பதிவு செய்தன. அவை (மின்சாரம், எரிவாயு மற்றும் நீர்வழங்கல் உள்பட) ஒட்டுமொத்த பயன்பாட்டு சேவைகளும் வணிகம், ஹோட்டல்கள், போக்குவரத்து, தகவல் தொடர்பு மற்றும் ஒளிபரப்பு போன்ற பலதரப்பு சேவைகளும்தான். மூன்றாவது காலாண்டின் 9.6 சதவீத வேகத்திலிருந்து கொஞ்சம் மந்தநிலை ஏற்பட்டபோதிலும், கட்டுமானம் 10.4 சதவீதமாக விரிவடைந்து பல துறைகளின் வளர்ச்சிக்கு வழிவகுத்தது. இது மொத்தமாக சேவைத் துறைகளில் ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டலை ஊக்கப்படுத்திய நிலையில், வர்த்தகம், ஹோட்டல்கள் மற்றும் போக்குவரத்து ஆகியவை 9.1 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்தன. ஒட்டுமொத்த மதிப்பு கூட்டலில் மிகப்பெரிய பங்கைக் கொண்ட இந்தத் துறை, கோவிட் -19 அச்சங்கள் குறைந்ததை அடுத்து பயணத் தேவை மீண்ட நிலையில் ஆரோக்கியமான 13.1 சதவீதமாக விரிவடைந்தது. உற்பத்தித் துறையிலும் ஒரு சின்ன நம்பிக்கை கீற்று தெரிந்தது. டிசம்பர் காலாண்டின் சுருக்கத்திலிருந்து 4.5 சதவீத விரிவாகக்தை அது பதிவு செய்தது. எஸ் அண்ட் பி குளோபல் நிறுவனத்தின் ஆய்வு அடிப்படையிலான கொள்முதல் மேலாளர்கள் குறியீட்டெண் (பிஎம்ஐ), சமீபத்திய மாதங்களில் பதிவுசெய்த தொடர்ச்சியான விரிவாக்கங்களை பிரதிபலிக்கும் வகையில், உற்பத்தி ஒட்டுமொத்த மதிப்புக் கூட்டல் மூன்றாவது காலாண்டில் இருந்து 20.4 சதவீதமாக அதிகரித்திருக்கிறது.
சொல்லப் போனால், சமீபத்திய பிஎம்ஐ கணக்கீடுகளை வைத்துப் பார்க்கும் போது, ஜனவரி 2021க்குப் பிறகு தொழிற்சாலை ஆர்டர்கள் மிக வேகமாக மே மாதத்தில் உயர்ந்திருப்பதை காட்டுகிறது. இது இந்த ஆண்டு உலகளாவிய பொருளாதார மந்தநிலை, அதிகரித்திருக்கும் நிச்சயமற்ற தன்மை மற்றும் அதிகரித்திருக்கும் நிதித் துறை அபாயங்கள் உட்பட வலுவான எதிர்விளைவுகளை எதிர்கொள்ளும் ஒரு பொருளாதாரத்திற்கு வரவேற்கத்தக்கதக்க அறிகுறியாகவும் தடுப்பு அரணாகவும் இருக்கும். முதலீட்டு நடவடிக்கைகளுக்கான மாற்றாக கருதப்படும் மொத்த நிலையான மூலதன உருவாக்கம், நான்காவது காலாண்டில் மீண்டும் உத்வேகம் பெற்றிருப்பதையும் என்.எஸ்.ஓ தரவு சுட்டிக்காட்டுகிறது. ஜி.எஃப்.சி.எஃப் ஆண்டுக்கு ஆண்டு ஆரோக்கியமான 8.9 சதவீதமாகவும், தொடர்ச்சியாக இன்னும் வலுவான 20.8 சதவீதமாகவும் விரிவடைந்தது. உள்கட்டமைப்பு மற்றும் பிற பெரிய அளவிலான பொதுப் பணிகளுக்கான அரசின் அதிகரித்த மூலதனச் செலவினங்கள் இதற்கு பெரிய அளவில் உதவின. அதன் ஒட்டுமொத்த பன்மடங்கு விளைவு மற்றும் வேலை உருவாக்கும் திறனைக் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, முதலீட்டு செலவினங்களில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் இந்த வருடத்தின் பார்வைக்கு நல்லதாக இருக்கும் என்பதுபோலத் தோன்றுகிறது. தேவையின் முக்கிய அரணாக இருக்கும் தனியார் நுகர்வு செலவினங்கள் இன்னும் ஒரு உறுதியான நிலையை மீண்டும் பெறவில்லை என்ற உண்மையை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி தரவுகள் காட்டுவதையும் பார்க்க வேண்டும். தனியார் நுகர்வு செலவினம் உண்மையில் மார்ச் காலாண்டில் முந்தைய காலகட்டத்தைவிட 3.2 சதவீதமாக சுருங்கியிருப்பதாக மதிப்பிடப்பட்டிருக்கிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் அதன் பங்கு குறைந்தது எட்டு காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 55 சதவீதமாக ஆக சுருங்கியிருக்கிறது. மழை பற்றாக்குறை காரணமாக எல் நினோ ஏற்படுவதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், வேளாண் உற்பத்தி மற்றும் அதனுடன் தொடர்புடைய ஊரக செலவினங்கள் பற்றிய பார்வையும் இப்போது சிக்கலில் இருக்கிறது. எனவே வரும் காலாண்டுகளில் நிதி மற்றும் பண நடவடிக்கைகள் வளர்ச்சிக்கு ஆதரவாக இருப்பதை கொள்கை வகுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
COMMents
SHARE