நீதிக்கான மல்யுத்தம்

குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கும் நிலையில் மல்யுத்த சம்மேளனத்தில் முழுமையான மாற்றம் தேவை

June 02, 2023 10:48 am | Updated 10:48 am IST

பாலியல் புகார்கள் சுமத்தப்பட்டிருக்கும் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும், பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷண் சரண் சிங்கை கைதுசெய்ய வேண்டும் என்று மல்யுத்த வீரர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். போராட்டத்தை உயிர்ப்புடன் வைக்கும் நோக்கத்துடன் அவர்கள் தங்களது திட்டங்களை தொடர்ந்து விவாதத்துக்குட்படுத்தவும் செய்கிறார்கள். போராட்டம் இப்போது விசாரணைகளின் நுணுக்கங்கள் பற்றி இல்லை. சட்டம் தன் கடமையை செய்யும் என்று எப்போதும் சொல்லப்படுவது பற்றி இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. போக்சோ உள்ளிட்ட கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசியல்ரீதியிலான கண்டனத்தை எதிர்கொள்வது பொதுவாழ்க்கையிலும், விளையாட்டுத்துறையின் நிர்வாகத்திலும் நேர்மைக்கு குந்தகம் விளைவிப்பதாகவே இருக்கிறது. திரு. சிங் மீதான வழக்குகள் விசாரணையில் இருப்பதாகவும், நீதிமன்றத்தில் நிலை அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றும் தொடர்ந்து தில்லி காவல்துறை கூறி வருகிறது. ஆனால், இந்த மிதமான கருத்தை பதிவுசெய்த, தனது சொந்த சமூக வலைதள பதிவுகளையே காவல்துறை நீக்க வேண்டியிருந்ததுகூட அதன் விசாரணையின் நியாயம் குறித்த கேள்விகளை எழுப்புகிறது. செவ்வாயன்று, சர்வதேச பதக்கங்களை வென்றவர்கள் உள்ளிட்ட மல்யுத்த வீரர்களின் போராட்டம் ஒரு உணர்ச்சிகரமான திருப்பத்தை எட்டியது. ஹரித்துவாரில் தங்கள் பதக்கங்களை கங்கையில் வீசுவதற்காக வீரர்கள் கூடியிருந்தார்கள். கடைசி நேரத்தில் அவர்கள் பின்வாங்கினாலும், நீதிக்கான குரலை அவர்கள் கைவிடுவதற்கு தயாராக இல்லை.

சிவில் சமூகத்தின் ஆதரவை பெற்றிருக்கும் இந்த போராட்டத்தின் மீது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உள்ளிட்ட சர்வதேச விளையாட்டு அமைப்புகளின் கவனமும் திரும்பியிருக்கிறது. இந்தியா புதிய நாடாளுமன்ற கட்டடத்தை திறந்து வைத்த அன்று நடந்த மல்யுத்த வீரர்கள் மீதான போலீஸ் ஒடுக்குமுறையை ஐக்கிய உலக மல்யுத்த அமைப்பு கண்டித்திருக்கிறது. உத்தரபிரதேசம் மற்றும் ஹரியானாவில் உள்ள ஜாட் விவசாயத் தலைவர்களும் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாகவும், போராட்டத்தை வலுப்படுத்தவும் முடிவுசெய்திருக்கிறார்கள். இதற்கிடையில், ஆளும் கட்சியின் கண்டனத்தை எதிர்கொள்ள வேண்டிய திரு. சிங், அதற்கு மாறாக தலைமையின் அரவணைப்பை அனுபவித்து வருவதாகத் தெரிகிறது. உ.பி.யின் கைசர்கஞ்ச் தொகுதியை சேர்ந்த இந்த சக்திவாய்ந்த நாடாளுமன்ற உறுப்பினர், போராட்டக்காரர்களை குற்றம் சாட்டியிருப்பதோடு தனது ஆதரவாளர்களையும் திரட்டி வருகிறார். தடா வழக்கில் ஒரு முறை குற்றம் சாட்டப்பட்ட திரு. சிங், பா.ஜ.க.வின் வேலைத்திட்டத்தில் இன்றியமையாத ஒரு நபராக இருப்பதுபோலத் தெரிகிறது. முறையான புலனாய்வையும் விசாரணையயும் உள்ளடக்கிய உரிய நடைமுறைகள் இல்லாமல் யாரும் தண்டிக்கப்பட வேண்டும் என்கிற நிலை இருக்க கூடாது. ஆனால் நேர்மை என்பது உயர் தரத்தில் இருக்க வேண்டும். திரு. சிங் மீதான குற்றச்சாட்டுகள் தீவிரமான தன்மை கொண்டவை. மதிப்புமிக்க விளையாட்டு அமைப்பின் தலைமைப் பொறுப்பில் இருப்பதற்கான அவரது தகுதியை குறைக்கும் தன்மை கொண்டவை. வீதியில் நடக்கும் போராட்டங்களால் குற்றவியல் விசாரணை பாதிக்கப்படக் கூடாது என்றாலும், இந்தியாவில் பாலியல் துன்புறுத்தல்களை சகித்துக் கொள்ள முடியாது என்கிற செய்தி அனைவருக்கும் குறிப்பாக பாதிக்கப்பட்டவர்களுக்கும், குற்றவாளிகளுக்கும் தெளிவாக இருக்க வேண்டும்.

Top News Today

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.