மே மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி) வருவாய் 11.5 சதவீதம் அதிகரித்து ரூ.1.57 லட்சம் கோடியை தாண்டியது. வசூல் ஏப்ரல் மாத வரவை விட 16 சதவீதம் குறைவாக இருக்கும் நிலையில், இது ஆறு மாதங்களில் மிக மந்தமான வளர்ச்சியைக் குறிக்கிறது என்றாலும், ஒரு நுணுக்கமான வாசிப்பு அவசியம். 1.87 லட்சம் கோடியைத் தாண்டிய ஏப்ரல் மாத வருவாய், நிதியாண்டின் கடைசி கட்ட உடன்பாடுகளால் அதிகரித்தது. இந்த நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் மாதத்தில் நடந்த பரிமாற்றங்களுக்கான மே மாத வசூல் மூன்று மாதங்களில் மிகக் குறைவாக இருந்தபோதிலும், அவை ஒரு பரந்த நேர்மறையான போக்கைக் குறிக்கின்றன. ஜி.எஸ்.டி வருவாய் தொடர்ந்து 15 மாதங்களாக ரூ .1.4 லட்சத்திற்கும் அதிகமாக இருந்தாலும், மே மாத வருவாய் ஆறாவது முறையாக ஜிஎஸ்டி வருவாய் ரூ .1.5 லட்சம் கோடியை தாண்டியிருப்பதை குறிக்கிறது. இதில் நான்கு முறை 2023ல் தாண்டியிருக்கிறது. மிக முக்கியமாக, ஏப்ரல் மாத உயர்வை கணக்கில் எடுக்கவில்லையென்றாலும் கூட, அக்டோபர் 2022 முதல் மே 2023 வரை சராசரி மாதாந்திர வருவாய் ரூ .1.53 லட்சம் கோடிக்கு மேல் இருக்கிறது (ஏப்ரல் மாத சாதனையையும் சேர்த்தால் ரூ.1.57 லட்சம் கோடிக்கு மேல் இது இருக்கும்). ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.7 சதவீதமாக குறைந்த போதிலும் மொத்த விலை பணவாட்டத்துக்குள் விழுந்த போதிலும் வருவாய் அதே நிலையில் இருந்திருக்கிறது. இந்த பின்னணியில், விலைவாசி உயர்வு தொடர்ந்து குறைந்தால், ஜி.எஸ்.டியில், 10 முதல், 12 சதவீத வளர்ச்சி விகிதம் இருக்கும். கடந்த ஆண்டை விட தீவிரமாக இருந்தாலும் சரியாகவே இருக்கும்.
மே மாதத்தின் பொருளாதார நடவடிக்கைகள் குறித்த ஆரம்ப தரவுகளை வைத்துப் பார்த்தால் அவை கொஞ்சம் வளர்ச்சி ஏற்பட்டிருப்பதை குறிக்கின்றன. எஸ் & பி குளோபலின் கொள்முதல் மேலாளர்கள் குறீயீட்டு எண்ணின் (பிஎம்ஐ) படி, உற்பத்தியாளர்களுக்கு அக்டோபர் 2020 முதல் சிறந்த மாதமாக இருந்தது; எரிபொருள் விற்பனை இரண்டு மாதங்களுக்குப் பிறகு மீண்டெழுந்தது; மேலும் மொத்த வாகன விற்பனை சில பிரிவுகளுக்கு குறைந்த அளவில் இருந்தாலும் பொதுவாக வேகமாக இருப்பதாகத் தெரிகிறது. தவிர, பிற இணக்கம் மற்றும் நுகர்வு சார்ந்த சாதகமான அம்சங்கள், வரும் மாதங்களில் வருவாயை உயர்த்தக்கூடும். ஜி.எஸ்.டி., வரி விதிப்பு முறை ஆறு ஆண்டுகளை நிறைவு செய்யும் ஜூலை வரை, வரி ஏய்ப்பு மற்றும் போலி பதிவுகளை தடுக்க, வருவாய் துறை, இரண்டு மாத சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதிக வருவாய் தாக்கங்களைக் கொண்ட வழக்குகளுக்கு முன்னுரிமை அளிக்க புதிய ரிட்டர்ன் ஆய்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. ஆகஸ்டு மாதம் முதல் ஆண்டுக்கு, 5 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு, மின் விலைப்பட்டியல் (இ – இன்வாய்சிங்) கட்டாயமாக்கப்படும். இதனால் வரி சோதனையில் இருக்கக் கூடிய தளர்வுகள் நீக்கப்படும். திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் சிலர் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்கள் சேமிப்பில் ஒரு பகுதியை செலவழிக்க விரும்புகிறார்கள் என்பது ஓரளவு உற்சாகத்தை அளிக்கக்கூடும். மாதாந்திர ஜி.எஸ்.டி வருவாயில் சுமார் ரூ .1.55 லட்சம் கோடி புதிய இயல்பானதாக இருக்கக்கூடும் என்றால், வரியை இன்னும்
வதைக்கும் கொள்கை அளவிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதை விரைவுபடுத்துவதற்கு அரசு இந்த வாய்ப்பைப் பயன்படுத்த வேண்டும். மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக அரசியல்ரீதியிலான வாய்ப்பு குறைவாக இருந்தாலும், தீர்ப்பாயங்களை அமைப்பது, விளையாட்டு மற்றும் சூதாட்ட வரிகளை தெளிவுபடுத்துவது, வரி விதிப்பு இல்லாத விகித கட்டமைப்பை நிர்ணயிப்பதற்கான வரைபடத்தை உருவாக்குவது போன்ற குறுகிய காலத்தில் என்ன செய்ய முடியுமோ அதை செய்வதில் ஜி.எஸ்.டி கவுன்சில் தடுமாற கூடாது.
COMMents
SHARE