ஒடிசாவின் பாலசோரில் ஜூன் 2ஆம் தேதி மூன்று ரயில்கள் மோதிய விபத்து, இந்தியா அதன் ரயில் சேவைகளை நவீனமயமாக்குவதிலும் விரிவுபடுத்துவதிலும் எதிர்கொள்ளும் சவால்களைப் பற்றிய சோகமான ஒரு நினைவூட்டல். இருபதாண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான இந்த ரயில் விபத்தில் ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மர்றும் சரக்கு ரயில் ஒன்று மோதியதில் குறைந்தது 275 பேர் கொல்லப்பட்டார்கள். 900க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தார்கள். ஆனால் இந்த வருடம் பிப்ரவரி மாதத்திலேயே கூட ரயில்வேத்துறையின் மைசூர் கோட்டத்தில் பிரூர்-சிக்ஜாஜூர் பிரிவில் ஹோசதுர்கா நிலையத்தில் இரண்டு ரயில்கள் மோதிக்கொள்ளாமல் தவிர்க்கப்பட்ட நிலையில், இது போன்ற ஒரு விபத்து எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். மைசூர் கோட்டத்தில் ரயில் ஓட்டுனரின் எச்சரிக்கையுணர்வு மற்றும் ரயிலின் மிதமான வேகம் காரணமாக ரயில் நிறுத்தப்பட்டதால் மட்டும்தான் அந்த விபத்து தவிர்க்கப்பட்டது. தவறான சமிஞ்சை அமைப்பு மற்றும் ஆபத்தான மனித தலையீட்டின் காரணமாக ரயில் திட்டமிடப்பட்ட பாதையிலிருந்து விலகியதாகச் சொல்லப்பட்டது. “உடனடி திருத்த நடவடிக்கைகள்” வேண்டும் என்றும் “அமைப்பு ரீதியிலான குறைபாடுகளை சரிசெய்யவும், குறுக்குவழிகளில் இறங்காத ஊழியர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும்” வேண்டும் என்றும் இந்த நிகழ்வு பற்றிய அதிகாரப்பூர்வமான பதிவு வலியுறுத்தியிருக்கிறது. பாலசோரில் நடந்த இந்த விபத்து கூட இயந்திரக் கோளாறுகள் மற்றும் மனித தவறுகளின் அதே பேரழிவு பாதையில் நடந்ததாக இப்போது ஆரம்ப விசாரணையில் தெரிகிறது.
கோவிட் -19 தொற்றுநோய்க்கு முந்தைய வருடத்தில் ஒரு நாளைக்கு 23 மில்லியனாக இருந்த உச்சத்துடன் ஒப்பிடும் போது இந்திய ரயில்வே இப்போது ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 15 மில்லியன் பயணிகளை ஏற்றிச் செல்கிறது. தனது ரயில்வே உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு லட்சிய திட்டத்தை கொண்டிருக்கிறது இந்தியா. அதன் பொருட்டு 2023-24ல், மூலதன
செலவினங்களுக்காக ரூ .2.4 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. கடந்த பத்தாண்டுகளில் ஒரு மில்லியன் ரயில் கிலோமீட்டருக்கு நடக்கும் விபத்துகளின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது. ஆனால் தண்டவாளங்கள் மற்றும் இரும்புப் பாதையின் மோசமான பராமரிப்பும், அதிக வேலைகளை செய்ய வேண்டியிருக்கும் ஊழியர்களும் ஜொலிக்கும் மேல்பூச்சுகளால் ரயில்வேத்துறை மறைக்க முடியாத பிரச்னைகள்தான். மோதல் எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் விரிவடைந்து வருகின்றன என்றாலும் அவை போதுமான வேகத்தில் இல்லை. 2021ஆம் ஆண்டில் வந்தே பாரத் என்று பெயரிடப்பட்ட 75 புதிய அரை அதிவேக ரயில்கள் 75 வாரங்களில் தொடங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். அவற்றில் பல ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டன. பயணிகளுக்கான வசதிகளிலும் கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. ஆனால் பாதுகாப்பை விட எதுவும் முக்கியமாக இருக்க முடியாது. பாலசோரில் நடந்த விபத்து இந்திய ரயில்வேத்துறையின் வளர்ச்சி திட்டங்களை சரியான பாதையில் கொண்டு செல்ல வேண்டும். வேகத்துக்கான முயற்சி இருக்க வேண்டும், ஆனால் பாதுகாப்புதான் மிக முக்கியம். பாலசோர் விபத்தில் நாசவேலை நடந்திருக்கலாம் என்றும் சொல்லப்படுகிறது. மத்திய புலனாய்வுத் துறையால் இது விசாரணைக்குட்படுத்தப்படும். செயல்பாட்டு மற்றும் திட்டமிடல் கட்டங்களில் ரயில்வேயின் திருத்த நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை. அதன் முன்னுரிமைகளை நவீனப்படுத்துவதற்கும் ஆய்வு செய்வதற்கும் இன்னும் அதிக வளங்களை கண்டடைய வேண்டும்.
COMMents
SHARE