பரபரப்பான வேகம் நிறைந்த சமீபத்திய இந்தியன் பிரீமியர் லீகின் இரவுகளுக்கு அப்பால் இப்போது ரோஹித் சர்மாவின் வீரர்கள் டெஸ்ட் போட்டிகளுக்கான வெள்ளை சீருடையில் ஒன்று கூட வேண்டிய நேரம் இது. டுவென்டி 20 ஆட்டம் அதற்குரிய பரபரப்புகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் ஒரு தேர்ந்த ரசிகரைப் பொறுத்தவரை, ஐந்து நாட்கள் பரந்த டெஸ்ட் கிரிக்கெட், தனிப்பட்ட வீரரையும் ஒட்டுமொத்த அணியையும் மதிப்பிடுவதற்கான இறுதியான அளவுகோல். லண்டன் ஓவல் மைதானத்தில் புதன்கிழமை தொடங்கும் இறுதிப் போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை விட பெரிய பரிசு எதுவும் இருக்க முடியாது. ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் மற்றும் மேற்கிந்தியர்கள் அதிக எண்ணிக்கையில் வசிக்கும் லண்டனின் ஒரு பகுதியில் இந்தியாவுக்கு நிறைய ஆதரவு இருக்கும். இது வெளிநாட்டில் நடைபெறும் ஆட்டமாக இருந்தாலும், இந்தியர்கள் அதிகமிருக்கும் களத்தில் ரோஹித்தின் வீரர்கள் வீட்டிலிருப்பதைப் போலதான் உணர்வார்கள். அது சொந்த மண்ணில் இருந்தாலும் அல்லது ஆஸ்திரேலிய மண்ணில் இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய ஆட்டங்கள் அனைத்திலும் இந்திய அணி அபாரமாக ஆடி வருகிறது. இரு அணிகளுக்குமிடையிலான போட்டி என்பது களிப்பூட்டும் ஒன்றாக இருக்கிறது. ஆனால் உச்சி மோதல்கள் என்பது கூடுதல் அழுத்தம் கொண்டது. இரு அணிகளும் சமமான அணிகளாகவே களத்தில் இறங்கும். கடைசியாக 2013ல் இங்கிலாந்தில் நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில்தான் இந்திய அணி ஐசிசி கோப்பையை வென்றது என்பது நிதர்சனமான உண்மை. இந்த வரலாற்று வெற்றிடத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியத்தை ரோஹித்தும் அவரது அணியும் உணர்வார்கள்.
2021ல் சவுத்தாம்ப்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில், கேன் வில்லியம்சனின் நியூசிலாந்திடம் இந்தியா தோல்வியடைந்தது. கேப்டன் ரோஹித், விராட் கோலி, புஜாரா, அஜிங்க்யா ரஹானே, அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோரைக் கொண்ட மூத்த குழுவுக்கு ஓவல் போட்டி என்பது, உலகக் கோப்பையை வெல்ல இன்னொரு வாய்ப்பை வழங்குகிறது. காயமடைந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ரிஷப் பந்த் ஜோடி இந்த முறை ஆட்டத்தில் பங்கெடுக்க முடியாது. ஆனால் ஷுப்மன் கில் சாதனைகளைப் புரியக் கூடிய ஒரு பேட்ஸ்மேனாக இருக்கிறார். தவிர ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிரான இந்திய பேட்டிங் என்கிற பழைய ஆட்டத்தை மீண்டும் பார்க்க முடியும். இந்திய அணியிலும் வலுவான சீம் தாக்குதல் இருக்கும் நிலையில், சுழற்பந்து வீச்சாளர்களான அஸ்வின், ஜடேஜா ஆகியோரை ரோஹித் களமிறங்குவாரா அல்லது ஒருவரை மட்டும் தேர்வு செய்வாரா என்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும். சிட்னியின் எஸ்.சி.ஜி போல ஓவல் ஆடுகளம் ஒரு துணைக்கண்ட தன்மையை கொண்டிருக்கலாம். ஆனால், வினோதமான ஆங்கில வானத்தின் கீழ், கொஞ்சம் புல்லும் இருக்கும் ஆடுகளத்தில் நடக்கும் இந்த மோதலில் பல அற்புதமான கோணங்களை வழங்கக் கூடும். எதிரணி கேப்டன் பாட் கம்மின்ஸ் வலுவான வேகப்பந்து வீச்சை வழிநடத்துகிறார். அவருக்கு ஆதரவாக மிட்செல் ஸ்டார்க் இடது கை பரிமாணத்தை வழங்குவார். ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷேன் ஆகியோரும் அவரது பேட்டிங் சகாக்களாக இருக்கிறார்கள். இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் தொடர் நெருங்கி வரும் நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி தனக்கு ஊக்கமளிக்கும் என்று கம்மின்ஸ் நம்புகிறார். அதே நேரத்தில் எப்போதும் நிலையானதாக இருக்கும் இந்தியா, உச்சப் போட்டியில் தனது நிதானத்தை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்று நிரூபிக்க விரும்புகிறது.
COMMents
SHARE