மணிப்பூரில் சுமார் 100 உயிர்களை பலி கொண்ட, 35,000க்கும் மேற்பட்ட மக்களை இடம் பெயர்த்த இனக்கலவரம் குறித்து விசாரிக்க மத்திய அரசு மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்திருப்பது வரவேற்கப்பட வேண்டியது. அதன் விதிமுறைகளும் தெளிவாக இருக்கின்றன. வன்முறை ஏற்பட்டதற்கான மற்றும் பரவியதற்கான காரணங்களையும் அதிகாரிகள் கடமை தவறினார்களா என்பதையும் குறித்து விசாரணை செய்வது அதன் கடப்பாடு. இது பாதிக்கப்பட்ட இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்திற்கான வாய்ப்பை ஏற்படுத்தக்கூடிய, உண்மையை வெளிக்கொண்டு வருவதற்கான செயல்முறையை அமல்படுத்தக் கூடிய ஆற்றலைக் கொண்டிருக்கிறது. கலவரங்களும் குறிப்பாக இனக்கலவரங்களும் உந்துசக்தி எதுவும் இல்லாமல் நிகழ்வது பொதுவாக அரிதான ஒன்று. காவல்துறையின் ஆயுதக் கிடங்குகளில் இருந்து திருடப்பட்ட ஆயுதங்களின் உதவியோடு மணிப்புரில் கலவரம் நடந்திருப்பதென்பது இதை வலியுறுத்தும் அம்சமாக இருக்கிறது. அதில் முக்கியமாக பங்கெடுத்தவர்கள்தான் வன்முறை நடவடிக்கைகளுக்கு பொறுப்பு என்று தீர்மானிப்பதும் அவர்களை பொறுப்புக்கூற வைப்பதும் நிர்வாகத்திற்கு பொறுப்பானவர்கள் மீது நம்பிக்கையை வளர்ப்பதற்கான முதல் படி. பாதிக்கப்பட்ட பகுதிகளை மத்திய உள்துறை அமைச்சர் பார்வையிட்ட பிறகும், கொள்ளையடிக்கப்பட்ட ஆயுதங்களில் 18 சதவீதம் மட்டுமே ஆயுதக் கிடங்குகளுக்குத் திரும்பியதும் மாநிலத்தில் தீ வைப்பும் வன்முறையும் தொடர்ந்ததும் மெய்ட்டிகள் மற்றும் குகி என்ற இரண்டு இன சமூகங்களிடையேயான அவநம்பிக்கை அப்படியே இருப்பதைதான் காட்டுகிறது. தவிர, நிலையான அமைதிக்கு திரும்புவதற்கான ஊக்கியாக செயல்படும் திறமை மாநில அரசுக்கு இல்லை என்பதையும் அது காட்டுகிறது.
வன்முறையை தடுக்கும் பொருட்டு இம்பால் பள்ளத்தாக்குக்கும் குகி மக்கள் வாழும் மலைப் பகுதிகளுக்கும் இடையிலான “இடையக மண்டலங்களில்” துணை ராணுவப்படைகள் ரோந்துப் பணியில் ஈடுபட்டதோடு பாதுகாப்பு கட்டமைப்பையும் உருவாக்கின. ஆனால் இது பெரிய அளவில் உதவி புரியாது. இரு சமூகங்களின் அரசியல் பிரதிநிதிகள் – குறிப்பாக வெவ்வேறு இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஒரே கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் – சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் தூதர்களாக செயல்பட வேண்டும். குழுக்களுக்கு இடையிலான அடிப்படை வேறுபாடுகள் தீர்க்க எளிதானவை அல்ல என்பதால் நீண்ட அரசியல் உரையாடல் மற்றும் நீண்டகால யோசனை தேவைப்படுகிறது. குக்கிகளில் (மற்றும் நாகர்களில்) பலர் அவர்களில் ஒரு பிரிவினரால் எதிர்க்கப்படும் மெய்ட்டிகளுக்கு பட்டியல் பழங்குடி அந்தஸ்து நியாயமற்றது என்று வாதிடுகிறார்கள். அதே நேரத்தில் மெய்ட்டி பிரிவினர் “மலைவாழ் பழங்குடியினருக்கு” வழங்கப்படும் நல்நோக்கு நடவடிக்கையின் நன்மைகளை வெறுக்கிறார்கள். இம்பால் பள்ளத்தாக்கில் எவருக்கும் இருக்கக்கூடிய உரிமைகளைப் போலல்லாமல் மலைப் பகுதிகளில் நிலம் வைத்திருக்கும் வெளிப்படையான சலுகை தங்களுக்கு இல்லை என்ற ஆதங்கமும் மெய்ட்டிகளுக்கு உள்ளது. குகிகளின் நில உரிமை மற்றும் குடியிருப்புகளின் வரலாற்றுரீதியிலான அமைப்புகள் காரணமாக அவர்கள் பாதுகாக்கப்பட்ட காடுகளை ஆக்கிரமித்திருப்பதாக குற்றசாட்டுகளுக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. அத்தகைய பகுதிகளை அகற்ற அரசு எடுக்கும் நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து அவர்கள் ஒடுக்கப்படுவதாக ஒரு மனநிலையில் இருக்கிறார்கள். இந்த சிக்கலான பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல் நல்லிணக்க செயல்பாடு வெற்றியடையாது. இது நடக்க வேண்டுமென்றால் இந்த சமூகங்களின் பிரதிநிதிகள் தங்களது குறுகிய குறுங்குழுவாத மனநிலைக்கு அப்பால் சென்று அரசியலமைப்பு சார்ந்த தீர்வுகளை தேட வேண்டும். வன்முறையைக் கட்டுப்படுத்தவும், இடம்பெயர்ந்தவர்களை அவர்களது வீடுகளுக்குத் திருப்பி அனுப்பவும், அவர்களது உயிர்களைப் பாதுகாக்கவும், விரும்பத்தகாத வன்முறைக்கு காரணமானவர்களைத் தனிமைப்படுத்தவும், அவர்களை நீதியின் முன் நிறுத்தவும் செய்வதன் மூலம் ஒரு தொடக்கத்தை உருவாக்கலாம். அதனாலேயே ஆணையத்தின் பணிகளை சார்ந்து நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
COMMents
SHARE