வெளிப்புறங்களில் இருக்கும் மிகப்பெரிய விளம்பரப் பலகைகள் உடைந்து விழுந்து மரணங்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் இப்போதெல்லாம் நகர்புறங்களில் விதிவிலக்குகளாக மட்டும் நடைபெறுவதில்லை. கடந்த வாரம் கோயம்புத்தூரில் மாற்றபட்டுக் கொண்டிருந்த பதாகையின் இரும்பு சட்டகங்கள் விழுந்ததால் மூன்று தொழிலாளர்கள் இறந்தது போன்ற துயரமான சம்பவங்கள் அரிதானவையும் அல்ல.mஅந்த விளம்பரப் பலகை சட்டவிரோதமானது என்று உடனடியாக அறிவித்த அதிகாரிகள், அது எப்படி அங்கு வந்தது என்று எந்த விளக்கமும் தரவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகளுக்கு உரிமம் வழங்குவதற்கான விதிமுறைகளுடன் கூடிய ‘தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023’ ஏப்ரல் மாதம்தான் அறிவிக்கப்பட்டது. நகரங்களில் விளம்பரப் பலகைகள் தொடர்ந்து அதிக அளவில் முளைத்துக் கொண்டிருக்கின்றன என்கிற கவலைகளுக்கு மத்தியில், நகராட்சி நிர்வாக அமைச்சர் அங்கீகரிக்கப்படாத விளம்பரப் பலகைகள் அனுமதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக விதிகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக வெளிப்படையாக சொன்னார். உரிமம் பெறாத விளம்பரப் பலகைகளைத் தடுப்பதில் பல மாநகராட்சிகள் தோல்வியடைந்து விட்டதையே குறைந்தது இருபதாண்டுகளாக வரக்கூடிய செய்திகள் காட்டுகின்றன. எப்போதாவது மேற்கொள்ளப்படும் திருத்த நடவடிக்கைகள்கூட நீதிமன்ற தலையீடுகளாலோ அல்லது ஆபத்தான விபத்துகளாலோ மேற்கொள்ளப் பட்டவையாகவே இருந்திருக்கின்றன. 2008ல் உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னையில் ஆயிரக்கணக்கான அங்கீகாரமற்ற விளம்பரப் பலகைகள் அகற்றப்பட்ட பிறகு, மறைக்கப்பட்ட பசுமையான நிலப்பரப்புகளையும், நகர்ப்புற வானவெளிகளையும் பார்க்க முடிந்ததென்பது தமிழ்நாட்டில் ஒரு எடுத்துக்காட்டு.
துரதிர்ஷ்டவசமாக, இந்த நடவடிக்கை தொடரவில்லை. சட்டத்தை மீறுவதில் முதலிடத்தில் இருப்பது அரசியல் கட்சிகள். பிளக்ஸ் பேனர்கள் மற்றும் ஒளிரும் கட்-அவுட்களில் தங்களது மிகப்பெரிய உருவங்களை பார்ப்பதை அரசியல் தலைவர்கள் ஊக்குவிக்கிறார்கள். 2019ல் சென்னையில் ஒரு அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இளம்பெண் ஒருவர் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அரசியல் செல்வாக்குள்ள தனி நபர்களோ குழுக்களோ லாபம் தரும் வெளிப்புற விளம்பரத்துக்கான உரிமைகளை வளைத்துக்கொள்ளும் நிலையில், சட்டரீதியான, எந்த சூழலிலும் நிலைத்தன்மைக் கொண்ட கட்டமைப்பு தேவைகளை அமல்படுத்துவதற்கான நிர்வாகரீதியிலான உறுதி குறைவாகவே இருக்கிறது. உரிமம் பெறாத விளம்பர பலகைகளை கணக்கெடுக்கவும், அங்கீகரிக்கப்பட்ட விளம்பர பலகைகளை அவ்வப்போது ஆய்வு செய்யவும், நிலையற்ற அல்லது சட்டவிரோதமான விளம்பர பலகைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் நகராட்சிகளில் போதுமான நபர்கள் இல்லாததும்கூட விபத்துகளுக்கு காரணமாகிறது. விளம்பரப் பலகைகளை ஒழுங்குபடுத்த வேண்டும் என்று அவ்வபோது சொல்லும் நீதித்துறை, அங்கீகாரமற்ற விளம்பரப் பலகைகளை அகற்றுவதைத் தடுக்கும் உத்தரவுகளையும் அடிக்கடி பிறப்பிக்கிறது என்பதும் கவலையளிக்கும் ஒரு விஷயம். இந்த விஷயத்தைப் பொறுத்தவரை சட்டத்தை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். மரணங்கள் ஏற்பட்டால் அவர்கள் மீது கடுமையான குற்றசாட்டுகளை சுமத்தி, தடைசெய்து இழப்பீட்டை பெறுவதும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்வதும்தான் பொருத்தமானதாக இருக்கும். விளம்பரப் பலகைகள் சாலைகளில் ஆபத்தான கவனச் சிதறல்களாக இருப்பதை சர்வதேச ஆய்வுகள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. அவை ஓட்டுநரின் எதிர்வினைக்கான நேரம், வாகன பக்கவாட்டு கட்டுப்பாடு மற்றும் சூழ்நிலை விழிப்புணர்வை பாதிப்பதாக ஆய்வுகள் தெரிவித்திருக்கின்றன. இந்தியாவில் வருடாந்திர சாலை விபத்துகளுக்கான அறிக்கையில் இது போன்ற கவனச்சிதறல்களால் ஏற்படும் விபத்துகளையும் சேர்த்து ஆவணப்படுத்தப்பட வேண்டும். 2023ல் சர்வதேச அளவில் 67.8 பில்லியன் டாலராக வளரத் தயாராக இருக்கும் விளம்பர பலகைகள் மற்றும் வெளிப்புற விளம்பர சந்தையில் சிறந்த கொள்கைகளை உருவாக்க இது உதவும்.
COMMents
SHARE