விவாதத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்

தேசத் துரோக சட்டத்தைத் தக்கவைத்து கொள்வது தற்போதைய சிந்தனையின் இயல்பான தன்மைக்கு எதிரானது

June 08, 2023 11:38 am | Updated 11:38 am IST

சில பாதுகாப்பு அம்சங்களுடன் தேசத் துரோகக் குற்றம் தண்டனைச் சட்டத்தில் தக்கவைக்கப்பட வேண்டும் என்று சட்ட ஆணையம் பரிந்துரைத்திருக்கிறது. காலனி ஆதிக்க காலத்தின் இந்த எச்சம் நாட்டிற்கு இனி தேவைப்படாது என தற்போதைய நீதித்துறையும் அரசியல் சிந்தனையும் இருக்கும் நிலையில், இந்தப் பரிந்துரை அதற்கு எதிராக இருக்கிறது. தேசத் துரோகத்தை பற்றிய இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 124 ஏ, சட்டத்தால் நிறுவப்பட்ட அரசின் மீது வெறுப்பு அல்லது அவமதிப்பைக் கொண்டு வரக்கூடிய, அதிருப்தியை தூண்டக்கூடிய அல்லது தூண்ட முயற்சிக்கும் பேச்சு அல்லது எழுத்தை தண்டிப்பதற்கான சட்டமாக இருக்கிறது. சட்டம் செல்லுபடியாகும் என்று 1962லேயே உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. ஆனால் வன்முறையைத் தூண்டக்கூடிய வகையிலோ, பொது அமைதியின்மையை ஏற்படுத்தக் கூடிய வகையிலோ அந்தச் சொற்கள் இருந்தன என வரையறுக்கப்பட்டால் மட்டுமே பேச்சு சுதந்திரத்தின் மீதான அரசியலமைப்பு ரீதியாக அனுமதிக்கப்பட்ட தடையாக அது இருக்கும் எனவும் சொன்னது. ஆனால் அப்போதிலிருந்து பேச்சு சுதந்திரத்தின் சட்டப்பூர்வமான வரையறைகள் எந்தளவுக்கு பயணித்துவிட்டன என்பதை கணக்கில் எடுத்துக்கொள்ள ஆணையம் தவறிவிட்டதாக சட்ட வல்லுனர்கள் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள். கடந்த ஆண்டு நிலுவையில் உள்ள தேசத்துரோக வழக்குகளை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், “ஐபிசி பிரிவு 124 - Aன் கடுமை தற்போதைய சமூக சூழலுடன் ஒத்துப்போகவில்லை” என்று கூறியது. மத்திய அரசும்கூட இந்த விதியை மறு ஆய்வுக்குட்படுத்தி மறுபரிசீலனை செய்ய முடிவெடுத்திருக்கிறது. அடிப்படை உரிமைகள் குறிப்பாக பேச்சு சுதந்திரம் மீதான எந்தவொரு தடையும் செல்லுபடியாகுமா என்பதை பரிசோதனைக்குட்படுத்தும் சமீபத்திய கொள்கைகளின் பின்னணியில் இந்த விதியை பரிசீலிப்பதற்கான நேரம் இது. இந்தச் சட்டத்தின் பரந்த தன்மையை வைத்துப் பார்க்கும்போது, மேலே சொன்ன அம்சங்களின் அடிப்படையில் ஆராய்ந்தால், அதில் தேசத்துரோகம் என்பது இருக்க முடியாது.

தேசத்துரோகம் குறித்து பொதுவாக எழுப்பப்படும் இரண்டு கவலைகளை குறித்து பேசுவதற்கு ஆணையம் முடிவு செய்திருக்கிறது. மிக அதிக அளவில் அதனை துஷ்பிரயோகம் செய்வதும் தற்காலத்திற்கு அது பொருந்துமா என்பதும்தான் அதன் இரண்டு கவலைகள். ஒரு சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவது, அந்தச் சட்டத்தைத் திரும்பப் பெறுவதற்கான அடிப்படையாகாது என்ற வெற்று வாதத்தை சட்ட ஆணைய குழு மீண்டும் முன்வைத்திருக்கிறது. ஆனால், சட்டப் புத்தகங்களில் அது தொடர்ந்து இருப்பதேகூட நியாயமற்ற முறையில், மாற்றுக்கருத்துகளை ஒடுக்கவும் விமர்சகர்களை சிறையிலடைக்கவும் அதை பயன்படுத்துவதற்கான பெரிய வாய்ப்பை வழங்குகிறது என்பதை ஆணையம் கருத்தில்கொள்ளத் தவறிவிட்டது. அறிக்கையில் சொல்லியிருப்பதன்படி பார்த்தால், வெறும் முன் அனுமதி பெறவேண்டும் என்பது கட்டாயமாக்கப்படுவதோ அல்லது கட்டாயமான பூர்வாங்க விசாரணையோ தேசத்துரோக வழக்குகளை குறைப்பதற்கு உதவுமா என்பது சந்தேகம்தான். தவிர, காலனித்துவ கால ஏற்பாடு என்பதே ஒரு விஷயத்தை நிராகரிப்பதற்கான அடிப்படையாகாது என்றும் கூட ஆணையம் அமைத்த குழு வாதிட்டிருக்கிறது. நாட்டில் நிலவும் பல்வேறு தீவிரவாத, பிரிவினைவாத இயக்கங்களையும் போக்குகளையும் சுட்டிக்காட்டி தண்டனை சட்டங்களில் தேசத்துரோக சட்டத்தையும் வைத்திருப்பதன் தேவையை நியாயப்படுத்தியிருக்கிறது அந்தக் குழு. தவிர “தீவிரமயமாதலை பரப்புவதில் சமூக ஊடகங்களில் எப்போதும் பெருகி வரும் பங்கைப்” பற்றியும் அது பேசியிருக்கிறது. ஆனால் சட்டத்தை தக்கவைத்துக் கொள்வதற்கு இவை மட்டுமே போதுமான காரணமாக இருக்க முடியாது. காரணம், பிளவு ஏற்படுத்தும் பரப்புரை, வன்முறையை தூண்டுதல் மற்றும் சமூக நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் குற்றசாட்டுகள் போன்றவற்றை தடுப்பதற்கு பிற தண்டனை விதிகள் இருக்கின்றன. சொல்லப்போனால் அரசை குறி வைக்கும் பேச்சு அல்லது எழுத்தை தண்டிக்கும் சட்டத்தைவிட இன்று அதிகம் தேவைப்படுவது வெறுப்புப் பேச்சுக்கு எதிரான ஒரு ஆற்றல் வாய்ந்த சட்ட கட்டமைப்புதான். குழுவின் அறிக்கை எப்படி இருந்தாலும், விதியை திரும்பப் பெறுவது பற்றி அரசு பரிசீலனை செய்ய வேண்டும்.

Top News Today

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.