மற்றொரு வீழ்ச்சி

சீக்கிய தீவிரவாதம் குறித்த இந்தியாவின் கவலைகளை சரிசெய்ய கனடா பெரிதாக எதுவும் செய்யவில்லை.

June 09, 2023 10:05 am | Updated 10:31 am IST

கனடாவின் பிராம்ப்டனில் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் படுகொலையை புகழ்ந்த ஒரு காட்சிப் படம், எதிர்பார்த்தது போலவே இந்திய அரசியல் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 1984ல் ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ நடவடிக்கைக்கு எதிரான தங்கள் எதிர்ப்பைக் குறிக்கும் வகையில் கனடிய சீக்கிய பிரிவினைவாத அல்லது “காலிஸ்தான்” குழுக்களின் வருடாந்திர அணிவகுப்பின் ஒரு பகுதியாக இந்த காட்சிப்படம் இருந்தது. இந்தக் கொலை ஒரு “பழிவாங்கும் நடவடிக்கை” என்று சொன்னது அந்த காட்சிப் படத்துடன் கூடிய விளம்பரத் தட்டி. கனடா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இந்திய எதிர்ப்பு பிரிவினைவாத, தீவிரவாத சக்திகளின் எழுச்சியால் ஏற்படும் ஆபத்துகளை அந்நாடு அங்கீகரிக்க வேண்டும் என்றும் இந்தியாவில் உள்ள அரசியல் தலைவர்கள் கோரியிருக்கிறார்கள். இந்த சம்பவம் பரந்த திட்டத்தின் ஒரு பகுதி என்று சொன்னார் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர். அதாவது இந்த சக்திகள் இந்தியா-கனடா உறவுக்கு மட்டுமல்லாமல் கனடாவுக்கேகூட ஒரு பெரிய சவாலை முன்வைக்க கூடும் என்பதை அவர் குறிப்பால் உணர்த்தினார். தவிர, இந்தக் குழுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு காரணம், எட்டு லட்சம் சீக்கியர்களைக் கொண்ட ஒரு பரந்த சமூகத்தை உள்ளடக்கிய கனடிய “வாக்கு வங்கிகளின்” தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டிய விருப்பமாகக்கூட இருக்கலாம் என்றார் அவர். 1985ல் நடந்த ஏர் இந்தியா விமான குண்டுவெடிப்பு போன்ற கடந்த கால சம்பவங்களைக் கருத்தில் கொண்டு பார்த்தால், வன்முறையை ஏற்கத்தக்க போராட்ட வடிவமாக அங்கீகரிக்கும் கலாச்சாரம் கனடாவின் தலைமைக்கும் கவலையளிக்கும் ஒன்றாக இருக்கும் என்று அவர் மேலும் சொன்னார். இந்தியா -கனடா உறவுகளில் இதே மாதிரியான பிரச்சினைகள் நிறைய இருக்கின்றன. அங்குள்ள கோயில்கள் மற்றும் சமூக மையங்களில் மோதிக்கு எதிரான, இந்தியாவுக்கு எதிரான காட்சிகள் வரையப்பட்டதோடு நாசவேலைகளும் நடந்திருக்கின்றன. அத்துடன் 2020 வேளாண் மசோதாவை எதிர்த்து போராடிய பஞ்சாப் விவசாயிகளை நரேந்திர மோதி அரசு நடத்தும் விதத்தை விமர்சித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கருத்து கூறியிருந்தார். இதன் விளைவாக இந்தியா, கனடாவுடனான உயர்மட்ட சந்திப்புகளை ரத்து செய்ததோடு இரு நாடுகளுக்குமிடையிலான எல்லா தொடர்புகளையும் கிட்டத்தட்ட துண்டித்தது. பின்னர் அவை மீண்டும் புதுப்பிக்கப்பட்டன.

சமீபத்திய பிரச்னை இத்தகைய இன்னொரு சுழலுக்கு இட்டுச் செல்லக் கூடும். இருதரப்பு உறவுகளில் மற்றொரு வீழ்ச்சி ஏற்படுவதைத் தவிர்க்க விரும்பினால் இரு அரசுகளும் பிரச்னைகளை ராஜதந்திரத்தோடு தீர்க்க வேண்டும். தனது நாட்டில் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் உரிமைகள் கனடா அரசுக்கு இருக்கிறது. ஆனால், ஒரு பிரதமரின் படுகொலையை மகிமைப்படுத்தும் காட்சிப் படம் என்பது பிரச்னையை தூண்டும் வெறுப்புப் பேச்சுக்களாக பார்க்கப்பட வேண்டும் என்றும், இது தீவிரவாதத்தைத் தூண்டக்கூடும் என்றும் நினைக்கும் இந்தியாவின் கவலையை அந்நாடு புரிந்து கொள்ள வேண்டும். இதற்கிடையில், சட்டப்பூர்வமான போராட்டங்களை அடக்க முற்படுவதற்குப் பதிலாக, அல்லது ஒவ்வொரு நாசகாரச் செயலுக்கும் அரசியல் ரீதியாக தலையீடு செய்வதற்கு பதிலாக, அத்தகைய குழுக்கள் செய்யும் தீவிரவாத நடவடிக்கைகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் போன்ற சதிகள் குறித்த ஆதாரங்களை பகிர்ந்து கொள்ளவும் இந்த விஷயத்தில் ஒத்துழைப்புத் தரவும் இந்தியா முயன்றால் அது இன்னும் பயனுள்ளதாக இருக்கும். காலிஸ்தான் போராட்டங்கள் ஆஸ்திரேலியா, ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் பல பகுதிகளில் ஏற்கனவே காணப்பட்டிருக்கின்றன. இதையும் கணக்கில் கொண்டு இன்னும் பரந்த ஒரு ராஜதந்திர வியூகத்தை மோடி அரசு வகுக்க வேண்டும். இதன் மூலம் இந்த பிரச்னையை கையாள்வதற்கான சிறந்த வழியை உறுதி செய்ய வேண்டும். ஜி-20 உச்சிமாநாட்டிற்காக செப்டம்பர் மாதம் இந்தியாவுக்கு வருகை தரும் இந்த நாடுகளின் தலைவர்களுடன்கூட இதை விவாதிக்கலாம்.

Top News Today

Comments

Comments have to be in English, and in full sentences. They cannot be abusive or personal. Please abide by our community guidelines for posting your comments.

We have migrated to a new commenting platform. If you are already a registered user of The Hindu and logged in, you may continue to engage with our articles. If you do not have an account please register and login to post comments. Users can access their older comments by logging into their accounts on Vuukle.