நேபாளம் அளவுக்கு வேறு எந்த நாடும் இந்தியாவுடன் மிக நெருக்கமான உறவைக் கொண்டிருக்கவில்லை. இரு நாட்டு எல்லையில் கட்டுப்பாடுகள் கிடையாது என்பதால், இரு நாடுகளின் குடிமக்களும் சாதாரணமாகப் போய்வருகிறார்கள். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு பொருளாதார, பாதுகாப்பு, கலாச்சார உறவுகளால் வடிவமைக்கப்பட்டவை. நேபாளத்திற்கு இந்தியாதான் பிரதானமான வர்த்தக, பயணக் கூட்டாளி. பெரும் எண்ணிக்கையிலான நேபாளிகள் இந்தியாவில் பணியாற்றுகிறார்கள், உயர் கல்வியை படிக்கிறார்கள். நேபாளத்துடனான நல்லுறவால் பக்கத்து நாட்டுடனான பாதகாப்பு மற்றும் புவி அரசியல் விவகாரங்களை எளிதில் கையாளுகிறது இந்தியா. ஆனால், இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் உறவு, சமீப காலத்தில் ஏற்றத்தைவிட, இறக்கத்தையே அதிகம் கண்டிருக்கிறது. காலாபாணி பகுதி தொடர்பான எல்லைப் பிரச்சனையே இதற்குக் காரணம். கட்கா பிரசாத் சர்மா ஓளி தலைமையிலான தீவிரத்தன்மை கொண்ட அரசு மாறி, 2022ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பு இருந்த நேபாள காங்கிரஸ் - மாவோயிஸ்ட் கூட்டணி ஆட்சிக்கு வந்ததும், இந்த விவகாரம் சற்றுத் தணியும் என எதிர்பார்க்கப்பட்டது. கடந்த வாரம் நான்கு நாள் விஜயமாக நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் இந்தியாவுக்கு வந்திருந்தார். இரு நாடுகளுக்கு இடையிலான உறவில் உறுத்தலான இந்த விவாகாரம் குறித்து, மிகத் தீவிரமாக ஆராயப்படவில்லை என்பதே இரு நாடுகளும் நல்லுறவை நோக்கி நகர்வதற்கான அடையாளமாகக் கொள்ள முடியும். இதைவிட முக்கியமாக, மின் துறை வளர்ச்சியிலும் வர்த்தகத்திலும் ஒத்துழைப்பை விரிவாக்குவதில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதால் பொருளாதார உறவுகளில் மேம்பாடு ஏற்பட்டிருக்கிறது. பத்தாண்டுகளுக்குள் நேபாளத்திலிருந்து இந்தியாவுக்குக் கிடைக்கும் மின்சாரத்தின் அளவை 10,000 மெகாவாட்டாக உயர்த்துவதற்கும் புதிய மின் தொடரமைப்புகளை உருவாக்கவுமான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள பெட்ரோலியம் குழாய் தொடரமைப்புகளை விரிவாக்கம் செய்வதோடு சிலிகுரிக்கும் ஜாபாவுக்கும் இடையில் புதிய பெட்ரோலியம் குழாய் தொடரமைப்பை உருவாக்கவும் புதிய முனையங்களை அமைக்கவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இதையெல்லாம்விட திரு. தஹலின் விஜயத்தில் நடந்த குறிப்பிடத்தக்க விஷயம், நேபாளத்தில் உற்பத்தியாகும் நீர் மின்சாரத்தை இந்தியப் பகுதிகளின் வழியாக வங்க தேசத்திற்கு எடுத்துச் செல்ல செய்யப்பட்டிருக்கும் ஒப்பந்தம்தான்.
இந்த ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வரும்போதுதான் திரு. தஹலின் விஜயம் எந்த அளவுக்கு வெற்றி என்பது சரியாக மதிப்பிடப்படும். ஆனால், ரயில் இணைப்புகள், நீர் மின் திட்டங்கள் போன்ற சமீபத்திய இந்தியத் திட்டங்களில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் ஊக்கமளிப்பதாக உள்ளது. நேபாளத்தில் அதிக ஆர்ப்பாட்டத்துடன், குறைவான பலனளிக்கக்கூடிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் சீனா ஈடுபடுகிறது. மாறாக இந்திய அரசு, வளர்ச்சித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து தனது உறவை விரிவுபடுத்துகிறது. நேபாளத்தின் சிக்கலான உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் சமீப காலமாக ரொம்பவும் தலையிடாமல் இருப்பதும் இந்தியாவுக்கு பொருத்தமாக இருக்கிறது. கடந்த தசாப்தத்தில் மாதேசி போராட்டத்தின்போது இந்தியாவின் தலையீடு குறித்த பார்வையால், அங்கிருந்த தீவிர தேசியவாதிகள் இந்தியாவுக்கு எதிரான உணர்வைத் தூண்டிவிட்ட நிலையில், இந்த நிலைப்பாட்டை இந்தியா எடுத்திருக்கிறது. பொருளாதார ஒத்துழைப்பிற்கு முக்கியத்துவம் கொடுப்பது, இரு நாடுகளுக்கு இடையிலான உறவை நல்ல நிலையில் வைத்திருக்கும் என்றாலும், எல்லை விவகாரத்தை இரு நாடுகளுமே அப்படியே புறந்தள்ளுவதன் மூலம் அந்தப் பிரச்சனையைத் தீர்த்துவிட முடியாது. இந்த விவகாரத்தை விவாதிப்பதற்கான வழிமுறைகளை உருவாக்கி, நீண்ட காலத் தீர்வைத் தேடுவதற்கு முன்னுரிமை அளிப்பதே முன்னோக்கிச் செல்வதற்கான வழி.
COMMents
SHARE